சபாநாயகர் அசோக ரன்வல தனது பட்டப்படிப்பு தொடர்பில் குறிப்பிட்டிருந்தால், அதை நிரூபிக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால், சபாநாயகர் தமது பதவியில் விலக வேண்டும் என்று தேசப்பிரிய தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், சபாநாயகர் இந்த சவாலுக்கு பதிலளிக்கத் தவறினால், தேசிய மக்கள் சக்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தினார்.
கல்வித்தகைமை
முன்னதாக சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளரான, பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறியும் இந்த சவாலை, சபாநாயகரிடம் முன்வைத்திருந்தார்.

சபாநாயகர், அசோக ரன்வல தனது இளங்கலை பட்டத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும், கலாநிதி பட்டத்தை ஜப்பானிலும் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்த சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன.
எனினும், சபாநாயகர் தரப்பில் இருந்து அல்லது தேசிய மக்கள் சக்தியின் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





