ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை தற்போது சந்தித்து வருகிறது. கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் காணாமல் போய்விட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலங்களும் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர் தப்பினர்.
இந்தப் பேரிடருக்காக மூன்று நாட்கள் ஸ்பெயினில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்சேஸ் அறிவித்துள்ளார்.
“பலர் காணாமல் போயுள்ளனர்” என்பதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சுவதாக அரசு கூறுகிறது.
வலென்சியாவில் குறைந்தது 92 இறப்புகள் பதிவாகியுள்ளன, வலென்சியாவின் மேற்கில் உள்ள காஸ்டில்லா-லா மன்சாவில் மேலும் இரண்டு இறப்புகளும், மலாகாவில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன. மலாகாவில் 71 வயதான பிரிட்டிஷ் நபர் தனது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.
கடந்த 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஏற்படும் மிக மோசமான வெள்ள பாதிப்பு இது.
ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு பிரதமர் சான்சேஸ் ஆற்றிய உரையில், குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியதுடன், முழுமையாக மீள்வோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
“ஒட்டுமொத்த ஸ்பெயினும் உங்களுடன் சேர்ந்து அழுகிறது… நாங்கள் உங்களைக் கைவிட மாட்டோம்” என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் சான்சேஸ் கூறினார்.
வலென்சியாவுக்கு அருகிலுள்ள முதல் நகரங்களில் ஒன்றான ஷிவாவில், ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை எட்டு மணிநேரத்தில் பெய்துள்ளதாக தேசிய வானிலை நிறுவனமான ஏமெட் தெரிவித்துள்ளது.





