புதிய அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் : தமிழரசு கட்சிக்கு எழுத்து மூல அழைப்பு விடுக்கப்படும் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு!
புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு தமிழரசு கட்சிக்கு எழுத்து மூலம் அழைப்பு அனுப்பப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், புதிய அரசியலமைப்பு தொடர்பாக பேசுவதற்கு தமிழரசு கட்சிக்கு உத்தியோபூர்வமாக எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்படவில்லை என கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஜனாதிபதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்கள் சார்ந்து என்ன விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் அவ்வாறு இடம்பெறாவிட்டால் பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என ஆராய உள்ளோம்.
இதற்காக தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் தலைவர்கள் ஒன்றிணந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்கனவே வவுனியாவில் ஆரம்பகட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.
நாங்கள் முதல் கட்டமாக பேசும்போது தமிழரசு கட்சிக்கு எவர் தலைவர் என தெரியாத நிலையில் பாராளுமன்ற குழு தலைவராக இருக்கின்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ரெலோ அமைப்பு சார்பில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனையும் அழைத்து பேசினோம்.
ஆகவே தற்போது தமிழரசு கட்சிக்கு பதில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற நிலையில் எமது கலந்துரையாடலுக்கான எழுத்து மூலமான அழைப்பிதழை அனுப்புவதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்





